Thursday 23 February 2012

நல்லொழுக்கங்கள்


நன்மை தரக் கூடிய குணங்கள் முப்பத்தாறு
  1. தெய்வங்களை வணங்க வேண்டும்.
  2. துவேசம் என்பதை விட்டொழிக்க வேண்டும்.
  3. சத்துள்ள ஆகாரத்தையே உண்ண வேண்டும்.
  4. தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. காரணமில்லாத கோபத்தை தவிர்க்க வேண்டும்.
  6. தன்னுடைய முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது.
  7. கர்வத்தைத் தவிர்த்துப் பணிவுடன் இருக்க வேண்டும்.
  8. கொடுமை  செய்யாமல் செல்வத்தை ஈட்ட வேண்டும்.
  9. நம்பத் தகுந்தவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
  10. தன்னுடைய மனைவியை ஒழுங்காகக் காப்பாற்ற வேண்டும்.
  11. அறியாமையின் காரணமாகத் தவறாக யாரையும் தாக்கக் கூடாது.
  12. தன்னுடைய நண்பர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது.
  13. எந்த நேரத்திலும் மக்களின்பால் அன்பை கைவிட்டு விடக் கூடாது.
  14. பெருமளவில் பெண்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
  15. தீய நடத்தை உடையவர்களை எந்த வேலையிலும் அமர்த்தக் கூடாது.
  16. தீர விசாரிக்காமல் யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்கக் கூடாது.
  17. தீயவர்களை விளக்கி, நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  18. மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில் அதிகாரம் செலுத்த வேண்டும்.
  19. தன்னிடம் விசுவாசம் இல்லாதவர்களை ஒற்றர்களாக நியமிக்கக் கூடாது.
  20. தனக்கு தீமை செய்தவர்கள் மேல் என்றுமே நம்பிக்கை வைக்கக் கூடாது.
  21. குரோதமும், ஆத்திரமுமின்றி தன்னுடைய கடமைகளை செய்ய வேண்டும்.
  22. ஹிம்சை செய்வதன் முலம், தன்னுடைய இலட்சியத்தை அடையக் கூடாது.
  23. தீய நோக்கம் உடையவர்கள் எதிரே எந்த ஆலோசனையையும் செய்யக் கூடாது.
  24. உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் – ஆனால் தீமை செய்தவர்களிடம் அல்ல.
  25. இன்பங்களை அனுபவிக்கும்போது அவற்றில் பெரும் பற்றுக் கொண்டு விடக்கூடாது.
  26. பெருமையடித்துக் கொள்ளாத தைரியமும், எப்பொழுதும் இன் சொல் பேச வேண்டும்.
  27. பெரியோர்களிடமும், நல்லவர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  28. பேராசை உடையவர்களை விலக்கி, மற்றவர்களுக்கு தர்மங்களைச் செய்ய வேண்டும்.
  29. சாமர்த்தியத்தைக் காட்டுவதற்க்குக் கூட, நல்ல நேரத்திற்க்காகக் காத்திருக்க வேண்டும் .
  30. கெட்ட பெயர் வராத வகையில் செல்வத்தை அடைவதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
  31. சரியான காரணத்தோடு எதிரியை வீழ்த்தினால், அதன் பிறகு அதை நினைத்து வருந்தக் கூடாது.
  32. தன்னுடைய சிறப்புகளைப் பற்றி பேசாமல், மற்றவர்களுடைய மேன்மைகளைப் பற்றியே பேச வேண்டும்.
  33. எல்லோரிடத்திலும் எல்லா நேரத்திலும் தயை, அதே நேரத்தில் தூய்மையான மனதுடன் இருக்க வேண்டும்.
  34. மற்றவர்களிடமிருந்து அபராதத் தொகைகளைப் பெரும்போது, நல்லவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.
  35. தன்னால் எவன் ஒருவனுக்கு நன்மை செய்யப்பட்டதோ அவன், தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  36. வெறும் வார்த்தைகளால் மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, காரியம் மூலமாக மற்றவர்களைத் திருப்தி செய்ய வேண்டும்.

மனிதன் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள்
  1. தானம் செய்ய வேண்டும்.
  2. பிறர் குற்றத்தைப் பேசக் கூடாது.
  3. ஈரமான காலுடன் படுக்க கூடாது.
  4. தினந்தோறும் நல்லவற்றை படிக்க வேண்டும்.
  5. சூரியன் உதயமான பின் யாரும் படுத்திருக்கலாகாது.
  6. உடலில் எந்தவிதமான ஆடையுமின்றி குளிக்கக் கூடாது.
  7. வடக்கிலும், மேற்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது.
  8. வயல்களிலும், போகிற வழிகளிலும் மலஜலம் கழிக்கக் கூடாது.
  9. கோபம், பொறாமை ஆகியவற்றை மனிதன் விட்டுவிட வேண்டும்.
  10. அழுக்கடைந்த கண்ணாடியில் தன் முகத்தை மனிதன் பார்க்கக் கூடாது.
  11. உட்காருகிற ஆசனத்தைக் காலால் இழுத்து அதன் மீது உட்காரக் கூடாது.
  12. பிறன் மனைவியுடன் தனிமையில் ஒரே ஆசனத்தில் கூட அமரக் கூடாது.
  13. இரவில் இரண்டு தெருக்களோ, நான்கு தெருக்களோ சந்திக்கும் இடங்களில் நிற்கக் கூடாது.
  14. பிறரைத் திட்டுவது, குறைசொல்வது, கோள் சொல்வது ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.
  15. சரீரத்தில் சுத்தமில்லாத போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது.
  16. தன்னுடைய ஒரு காலை மற்றொரு காலினால் மிதிக்கக் கூடாது. அது மிகவும் கெட்ட பழக்கம்.
  17. ஓடுகளை உடைப்பது, நகத்தைக் கடிப்பது போன்றவை அசுத்தமான வழக்கங்கள். அவற்றை விட்டுவிட வேண்டும்.
  18. பொழுது விடிவதற்கு முன்பாக மனிதன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தர்ம நியாயங்களைப் பற்றி நினைக்க வேண்டும்.
  19. பிறன் மனைவியை நாடக் கூடாது. அதைப் போல் ஆயுளைக் குறைத்து, பாவத்தைக் கூட்டும் காரியம் வேறு எதுவும் இல்லை,
  20. அடிப்பது என்பது திருத்துவதற்காக மட்டுமே வழக்கில் வந்தது, ஆகையால் தன் மகன் அல்லது சிஷ்யன் ஆகியோரைத் தவிர, வேறு எவரிடமும் அதைப் பயன்படுத்தக் கூடாது.
  21. சுற்றத்தான், நண்பன், கணவனில்லாத சகோதரி, குரு, பண்டிதன், வயது முதிர்ந்தவன் – ஆகியோர் ஏழைகளாக இருந்தால், அவர்களைத் தன்னால் இயன்ற வரையில் காப்பாற்ற வேண்டும்.
  22. கை கூப்பி நின்று சூரியன் உதயமாகும் போதே அவனை பூஜிக்க வேண்டும். உச்சி சூரியனையும், கிரஹணம் பிடித்த சூரியனையும், நீரில் தெரியும் சூரியனின் பிம்பத்தையும் பார்க்கக் கூடாது.
  23. தாய், தந்தை, குரு ஆகியோர் கட்டளை இடும்போது அது நல்ல காரியமா, கெட்ட காரியமா என்று ஆராய்ந்து அறியும் உரிமை மனிதனுக்கு கிடையாது. அக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
  24. எதைக் கூறினால் மற்றொருவன் மனம் புண்படுமோ அதைக் கூறக் கூடாது. தீயினால் சுட்ட புண் ஆறும், வார்த்தையினால் ஏற்படுத்தப்பட்ட புண் ஆறுவதில்லை. ஆகையால் யாரையும் புண் படுத்திப் பேசக் கூடாது.
  25. தெருவில் செல்லும் போது, பிராமணன், பசு, அரசன், வயோதிகன், கர்ப்பிணிப் பெண், சுமையைத் தூக்கிச் செல்பவன், உடல் நலிந்தவன் ஆகியோர் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு வழி விட்டு, அதன் பின் நாம் நடக்க வேண்டும்.
  26. தன்னுடைய பிறந்த நட்சத்திரம், தன்னுடைய பிறந்த நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நாள், பூரட்டாதி, உத்திரட்டாதி, கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களிலும், அஷ்டமி, சதுர்தசி, அம்மாவாசை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
  27. மனைவிக்கு மாதவிலக்கு முடிந்த நான்காவது தினம் வரை அவளுடன் கணவன் சேரக்கூடாது; ஐந்தாவது நாள் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும். ஆறாவது நாள் இனைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். மாதவிலக்கு முடிந்து பதினாறாவது நாள் வரை கர்ப்பமுண்டாவதற்கான காலம் என்று கூறப்படுகிறது.
  28. புகழ், ஆயுள், செல்வம் எல்லாவற்றையும் கொடுப்பது நல்ல ஆசாரமே!.  நல்ல ஆசாரங்களிலிருந்து நழுவாதவன் நல்லுலகங்களை அடைவான்.

No comments:

Post a Comment