Thursday 10 May 2012

இன்றைய கல்வியின் அவலம்

"கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்றான் வள்ளுவன். நாளந்தா, தக்ஷஷீலம் போன்ற பல்கலைகழகம் மூலம் உலகுக்கே கல்வியை தந்த நாடு. ஆனால் இன்றைய கல்வி நிலையை நினைத்தால் மனம் புளுங்குகிறது. ஏன்? ஒரு மாணவனாக, கல்வியாளனாக, ஆசிரியனாக மற்றும் இந்த நாட்டின் குடிமகனாக என் உள்ளக் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன். ஒரு நாட்டின் கல்வி அந்த நாட்டின் மனித வளத்தை உயர்த்த உதவ வேண்டும். மக்களின் மனதில் நல்ல பண்பு பதிவை உருவாக்க வேண்டும். மனதில் தைரியத்தை வளர்க்க வேண்டும். ஆனால் இன்றைய கல்வி முறை இத்தகைய மன வளத்தை ஆரோக்யமான சமுதாயத்தை வளர்க்கிறதா என்றால் கேள்விக்குறி?

இன்றைய இளைய தலைமுறை எந்த அளவுக்கு தரம் கெட்டு போய் விட்டது என்றால் எட்டாம் வகுப்பு வகுப்பு மாணவன் தூக்கு போட்டுகொள்கிறான், ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன் ஆசிரியையே கொல்கிறான், கல்லூரி மாணவர்கள் ஈவ் டீசிங்கினால் துன்புறுத்தப்படுகிரார்கள், கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை, கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மரணம், புத்தாண்டு கொண்டாட்டத்தில் சக மாணவியை மாணவர்கள் பலாத்காரம் செய்தனர்,  கல்லூரி மாணவர்கள் போதை மருந்துக்கு அடிமை, வீட்டு பாடம் செய்யாத  மாணவர்களை
ஆசிரியர் கொடுமை  படுத்தினார், கல்லூரி மாணவியை ஆசிரியர் கற்பழித்தார், பள்ளி மாணவர்களை ஆசிரியர் தன் வீட்டு வேலை செய்ய வைத்தார், காலதாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது அன்றாட செய்தி.

 இப்படி பட்ட பிரச்சனைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் அதில் சில... படிக்க முடியவில்லை, மதிப்பெண் குறைவு, மற்ற மாணவர்களைப் போல் என்னால் சுகமாக வாழ முடியவில்லை, அந்த பெண்ணை போல் நான் அழகாக இல்லை, என் அப்பா சரி இல்லை தினமும் குடித்து விட்டு அம்மாவை அடிக்கிறார், எனக்கு வாகண வசதியில்லை, சுகமாக வாழ ஆசைப்பட்டு விபசாரத்தில் சிக்கிவிட்டோம், என் காதலிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க காசு இல்லை, அந்த திரைப்படத்தை பார்த்தேன் அதை போல செய்ய ஆசை, இந்த விசயத்தை அந்த திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் இப்படி குடும்பத்தில் பிரச்னை, மன உளைச்சலை தீர்க்க இந்த வழியை நாடினேன், என் பிள்ளை என் சொல் கேட்பதில்லை. 

மகனை தூக்கில் தொங்கும் படி செய்யும் அளவுக்கு பெற்றோர்களின் பேராசை. ஆசிரியர்களின் அடாவடித்தனம், நான் தான் இந்த நாட்டின்  தலைவன் என்ற அகங்காரம் பிடித்த அரசியல்வாதிகள், என்னை இந்த வேளையில் இருந்து தூக்க யாராலும் முடியாது என்கிற அரசு ஊழியர்கள், எனக்கு வேலை இல்லாமல் சம்பளம் வேண்டும் என்கிற தொழிலாளிகள், நான் சுகமாக வாழ வேண்டும் என்கிற மடத்தனம், கடன் வாங்கியாவது மகனுக்கு பைக் வாங்கி தருவேன் என்கிற சராசரி பெற்றோர்கள், கஞ்சி குடிக்க வலி இல்லா விட்டாலும் தன் மகனை தனியார் பள்ளியில் தான் சேர்த்துவேன் என்று அடம் பிடிக்கும் சாதாரண கூலி தொழிலாளிகள், காலணா  காசா இருந்தாலும் அது கவர்மென்ட் காசாத்தான் இருக்க வேணும் என்று பெண்ணை பெத்தவர்கள் மாப்பிள்ளை தேடும் நிலைமை. 

வாழ்ந்தால் பணக்காரனாக வாழ வேண்டும் என்ற நடுத்தர மக்கள், பணம் சம்பாறிக்க எந்த வழியானாலும் பரவாயில்லை என்று  நினைக்கும் இளைய சமுதாயம், குடி, கூத்து, சினிமா என ஊர் சுற்றும் வெட்டி பயல்கள், குடிப்பது தப்பு இல்லை என்று சொல்லும் ஆராய்ச்சி கட்டுரை, அளவாக குடித்தால் செக்ஸ் இன்பம் நன்றாக இருக்கும் என்ற தின பத்திரிக்கையின் குருந்தகவல்கள், அதிகமாக நுகரப்படும் அசைவ உணவுகள், வெளி நாட்டின் மோகங்கள், எப்படி வாழ்ந்தாலும்  பரவாயில்லை என்கிற உள்ளுணர்வு, நான் இங்கு என்ன செய்தால் யாருக்கு தெரியப்போகிறது என்ற நகர மக்களின் நாகரீக முனேற்றம், இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி என்கிற கால கேடு, கணினியை திறந்தால் காம இச்சையை தூண்டும் பாலான படங்கள், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர் அப்படி இல்லை, என் அப்பாவே அப்படித்தான் என்று கூறும் இளம் பிஞ்சுகள், இன்னும் பல... இவை எல்லாம் காரணம். இது எல்லாம் மேற்போக்கான காரணமாக இருக்க முடியுமே தவிர உண்மையான காரணமாக இருக்க முடியாது. முடியவே முடியாது. அப்படி என்றால் உண்மையான காரணம் என்ன?

 காலக் கொடுமை? எங்கேயோ தவறு இருக்கிறது. என்ன அது? பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், அரசாங்க ஊழியர்களையும், அரசியல்வாதிகளுயும்  மட்டுமே குறை சொல்ல முடியாது. அது அவர்கள் தவறு அல்ல. கல்வியின் தவறாக கூட இருக்கலாம் ஏன் என்றால் அவர்களும் இந்த கல்வியை தான் படித்திருக்கிறார்கள். எங்கேயோ தவறு நடக்கிறது. ஏன் இந்த ஆங்கில மோகம், பொறியியல் மோகம், மருத்துவ மோகம். இந்த பட்டம் பெற்றால் தான் வாழ முடியும் என்றால் நாட்டில் பாதி பேருக்கு மேல் சாக வேண்டியதுதான். அனைவரும் அறிந்த உண்மை. அறிந்தும் மக்கள் தன் மகளை அல்லது மகனை ஏன்  இவ்வளவு கொடுமைபடுத்துகிறார்கள். புரியாத புதிர்!

மக்களிடையே உள்ள ஆசை, கோபம், பேராசை, மோகம், அகங்காரம், பொறாமை என்ற ஆறு எதிரிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  இருந்து அவனை கீழான பாதையை நோக்கி இழுக்கின்றன. இந்த ஆறு பிரச்சனைகளை பற்றி இன்றைய கல்வி சரியான கண்ணோட்டத்தை கொடுக்கிறதா என்றால் அழுத்தம் திருத்தமாக கூற முடியும் இல்லை என்று. சரியாக நன்றாக சிந்தித்து பார்த்தால் நமக்கு இவ்வளவு நாள் புரியாத ஒன்று புரியும் என்ன அது. மேலே விவரிக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த ஆறு வகையான மனிதனின் உள் எதிரிகளினால் நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக புரியும். அப்படி என்றால் இந்த பிரச்சனைகளை பற்றி நம் பாட புத்தகத்தில் பேசபட்டிருக்கிறதா என்றால் அதுவும் சுத்தம். 

அறிவியலுக்கும், கணிதத்திற்கும், மருத்துவத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் பண்பாட்டு கல்விக்கு கொடுப்பதில்லை. வேத காலத்தில் முதலில் பண்பாட்டு கல்வி போதிக்கப்படும் பின்னர் அவரவருக்கு விருப்பப்பட்ட படம் கற்பிக்கபடும். அதனால் தான் மிக சிறந்த கல்வியாளர்களான ஜனகர், வியாசர், விஸ்வாமித்திரர் போன்றோர் கூட சாதாரணமான மிக தரமான அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய கல்வியில் ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று நிர்ணயக்கும் நிலை உள்ளது. ஒழுக்கம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று கேள்வி கேட்கும் பல முட்டாள்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். 

இன்றைய கல்வி பணத்தை உருவாக்கும் பண முதலையாக இருக்க முடியுமே தவிர தரமான வாழ்க்கை தர முடியவே முடியாது. இங்கு தரம் என்பது நாகரீகத்தை  குறிப்பதல்ல கலாசாரத்தை குறிப்பது. இந்த இடத்தில் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் நாகரீகத்திற்கும் கலாசாரத்துக்கும் உள்ள வித்யாசம். நாகரீகம் என்பது நம்மிடம் உள்ள பொருட்களின் அளவை பற்றியது,  கலாசாரம் என்பது நம்மிடம் உள்ள மன நிம்மதியை குறிப்பது. இங்கு நான் குறிப்பிட்ட தரம் என்பது  கலாசார வாழ்கையை.  இன்றைய கல்வியில் பண்பாட்டு கல்வியை இணைத்து மாணவ சமுதாயத்தின் தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் அதுவே நிரந்தரமான தீர்வாக அமைய முடியும். இன்றைய மாணவர்கள் நாளைய பெற்றோர்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" இதுவே சரியான தருணம். எனவே அனைவரும் மாணவ சமுதாயத்தின் மீது  கவனம் கொடுக்க வேண்டும்.

கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பெற்றோர்களே மாணவர்களே ஆசிரியர்களே கல்வியாளர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள். காலம் கனிந்துவிட்டது. கால தாமதம் பேரிடரில் போய் முடியும் .

No comments:

Post a Comment