Sunday 15 December 2013

Sathyam vada

Vayur anilam amritam; Athedam bhasmantam shriram

Let this temporary body be burned to ashes. But the breath of life belongs elsewhere. May it find its way back to the Immortal Breath.

Satyam vada. Asatyam mavada

Speak the truth, never speak the untruth.

Satyam bruyat priyam, na bruyat satyam apriyam

Speak the truth in a pleasing manner, but never speak that truth which is unpleasant to others.

Monday 11 November 2013

ஹிந்து

ஹிந்து
 
ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை(religion), கலாச்சாரத்தை (culture), தத்துவ அறிவு (philosophy),  வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (culture) குறிக்கிறது.

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம், பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.


சமண சமயம்

இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழ்ச் சமணர் அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரால் பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது.மகாவீரருக்கு முன்பு 24 தீர்த்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.

சமணம் என்ற சொல்லின் பொருள்

சமணம் எனும் சொல் ஸ்ரமணம் என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம். கடிய நோன்புகளிளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்கு சிறப்பு விளக்கம் செய்வர்.

சமண சமயப் பிரிவுகள்:

சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும் , வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
  • சுதனக்வாசி - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.
  • சுவேதம்பர தேராபந்த் - ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பெற்றது.
  • பிசாபந்த
  • முர்டிபுஜக - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.

இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்

  1. அகிம்சை
  2. வாய்மை
  3. கள்ளாமை
  4. துறவு
  5. அவாவறுத்தல்

துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்

  1. ஐம்பொறி அடக்கம் ஐந்து
  2. ஆவஸ்யகம் ஆறு
  3. லோசம்
  4. திகம்பரம் (உடை உடுத்தாமை)
  5. நீராடாமை
  6. பல் தேய்க்காமை
  7. தரையில் படுத்தல்
  8. நின்று உண்ணல்
  9. ஒரு வேளை மட்டும் உண்ணல்
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாள 2500 காலத்திற்கும் முற்பட்டதாகும்.
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. (அகம் 123)
பாண்டிய மன்னன் நின்றிசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்மந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன."
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமன சமயத்தை பரப்ப வந்த சமன துறவிகளை தேவகோட்டை மன்னன் விரட்டியதால் உயிருக்கு பயந்து தற்பொதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமன துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆகும்.

சமணரும் தமிழும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம்மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் இலக்கியம், இலக்கணம் (மொழியியல்), உரைநடை, அகராதி நிகண்டு, மற்றும் தருக்கம் ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." 
  • சீவக சிந்தாமணி (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
  • வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
  • நீலகேசி தற்போது கிடைக்கவில்லை
  • திருக்குறள்
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • ஏலாதி
  • திணைமாலை நூற்றைம்பது

ஐஞ்சிறுகாப்பியம்

  • உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
  • நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
  • யசோதர காப்பியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
  • நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
  • சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
  • பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)

Monday 19 August 2013

புதுமணத் தம்பதிகளுக்கு...

எதையுமே எதிர்பார்க்காதவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களை சந்திப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு. இந்தத் தத்துவம், நம்  எல்லோருக்கும், எல்லாக் காலகட்டங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண உறவில் அடியெடுத்து வைப்போருக்கு!
திருமண பந்தத்தினுள் நுழையும்போது, நாம் ஒரு புதிய மனிதரைப் பார்க்கிறோம். அந்த நபர் நமக்குப் பொருத்தமானவர் என்றும், நமக்கு வேண்டிய  எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்றும் ஆழ்மனதில் நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு பதிந்து விடுகிறது. ‘எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை’ என  வெளியே சொல்லிக் கொண்டாலும், எல்லா மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் அது இருக்கும்.

நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோரும், அது வாழ்க்கைத்துணையோ, குழந்தைகளோ, நண்பர்களோ யாராகினும், அவர்கள் நம்மைப் புரிந்து நடந்துகொள்ள  வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என சிலபல எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஏதேனும் பிரச்னை வந்தால்,  தவறு நம் மீதே இருந்தாலும், நம்மைச் சார்ந்தவர்கள் நமக்குத்தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்றாட  வாழ்க்கையில் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லைதான். ஆனால், அது அளவோடு இருந்தால் பரவாயில்லை. எல்லா விஷயங்களிலும்  எதிர்பார்ப்புகள் கூடும்போது, நம்மையும் அறியாமல் எதிராளியை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதை உணர்வதில்லை. எதிர்பார்ப்புகள் கூடக்கூட,  ஒவ்வொரு செயலிலும் அனுபவிக்க வேண்டிய வியப்பை நாம் தவற விடுகிறோம். எதிர்பார்க்காமல் நடக்கும் விஷயத்தில் கிடைக்கிற சந்தோஷமும்  சுவாரஸ்யமும் ஈடு இணையற்றது. நினைத்தது நினைத்த மாதிரியே நடந்தது என்கிற திருப்தியைத் தவிர, எதிர்பார்ப்பு வேறெதையும் நமக்குக்  கொடுப்பதில்லை.

திருமண வாழ்க்கையில் இத்தகைய எதிர்பார்ப்புகள்தான் உறவுகள் சிதையவும், திருமணத்தைத் தோல்வியடையச் செய்யவும் காரணமாகின்றன.  விவாகரத்து வேண்டி வழக்கறிஞர் களை அணுகும் பலரிடமும் பிரிவுக்கான காரணத்தைக் கேட்டுப் பாருங்கள்... ‘அவ (அல்லது) அவர் நான்  சொல்றபடி கேட்கறதே இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு கணவனோ, மனைவியோ தனக்குக் கட்டுப்பட்டு, தன்  விருப்பப்படி வாழ வேண்டும் என நினைப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான். அதன் பின்னணியில் மறைந்திருப்பது கட்டுப்பாடன்றி வேறில்லை. எதிர்பார்க்கிற உங்கள் குணத்தால், துணையின் திறமைகள் அனைத்துக்கும் கதவடைக்கப்படுகிறது.

எதிர்பார்ப்புகள் குறைவதால், அங்கே அன்பும் காதலும் அதிகமாகிறது. உறவுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.  உதாரணத்துக்கு உங்கள் குழந்தையையே  எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைச் செய்யாதே என நீங்கள் சொன்னால், அது வேண்டுமென்றே அதைத்தான் செய்யும். நாம் என்ன செய்ய  வேண்டும் என்பதை இன்னொருவர் நமக்கு சுட்டிக் காட்டுவது குழந்தை உள்பட யாருக்குமே பிடிப்பதில்லை.

எதிர்பார்ப்பதும் அதை எதிர்ப்பதும்தான் மனித இயல்பு. உலகம் புரியாத குழந்தைகளுக்கே இப்படி என்றால், உங்களில் சரிபாதியான துணை மட்டும்  விதிவிலக்கா என்ன?

எதிர்பார்ப்புகளில் மறைந்திருக்கிற அடுத்த ஆபத்து, குறை கண்டுபிடிப்பதும், திட்டுவதும், விமர்சனம் செய்வதும். ‘இத்தனை வருஷமா என்கூட குப்பை  கொட்டறே... எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு தெரியாதா?’ என்கிற திட்டில் நிறைந்திருப்பது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பு மட்டுமே. சரி...

எதிர்பார்ப்பில்லாத உறவுக்கு எப்படிப் பழகுவது?


உங்கள் துணையின் செயல்கள் உங்களுக்குக் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ உண்டாக்கும் ஒவ்வொரு முறையும், உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்துவதையோ, திட்டுவதையோ, கடுமையாக விமர்சனம் செய்வதையோ தவிருங்கள். உங்களுடைய ரியாக்ஷன், எதிர்பார்ப்பின் விளைவாக  உண்டானதா என ஒரு நிமிடம் யோசியுங்கள். ‘காலையில எனக்கு வேணும்னு தெரியாது... சட்டையை ஏன் அயர்ன் பண்ணி வைக்கலே?’ என்று  கத்துவது சுலபம்.

மனைவி என்பவள், கணவனின் தேவையறிந்து பணிவிடை கள் செய்யக் கடமைப்பட்டவள்தானே என்று காலங்காலமாக ஆண்கள் மனதில் பதிந்து  போன எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதானே இது? எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத போது, நம்மையும் அறியாமல் எதிராளியிடம் கடுமையாக நடந்து  கொள்கிறோம். எதிராளி அமைதியானவர் என்றால் அடங்கிப் போவார். அப்படியில்லாத பட்சத்தில், தன் பங்குக்கு திருப்பி வார்த்தைகளைக் கக்குவார்.  இருவருக்குமான வாக்குவாதம் முற்றும். அன்யோன்யம் கெடும்.

எதிர்பார்ப்புகளைக் கையாள் வது என்பது கணவன் - மனைவி இருவருக்குமே அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு கலை. அது வாழ்க்கையில்  மிகப்பெரிய சவாலும்கூட. வாழ்நாள் முழுவதும் அந்தச் சவாலை எதிர்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகளை  அழைப்புகளாக மாற்றுவது இந்தப் பிரச்னைக்கான அருமையான தீர்வு. எதிர்பார்க்கும் போது, எதிராளி அதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற  மறைமுகக் கட்டுப்பாட்டையும் வைக்கிறோம். ஆனால், அழைப்பில் அப்படியில்லை.

செய்வதும் செய்யாமல் தவிர்ப்பதும் துணையின் தனிப்பட்ட விருப்பம். அழைப்பில் ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டிய அழுத்தமோ, மிரட்டலோ,  பயமுறுத்தலோ இருப்பதில்லை. ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாமா?’ என்றோ, ‘நாம ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என்றோ, உங்கள்  துணைக்கு அழைப்பு விடுக்கலாம். இந்த அணுகுமுறை நேர்மையானது. பாதுகாப்பானது. நம்மைப் போலவே நம் துணைக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.  துணையாகிய நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அவருக்கும் இருக்கும் என யோசித்தாலே நம் தவறு நமக்குப்  புரிந்து விடும். முதல் கட்டமாக நம்மை மாற்றிக் கொள்ளவும் முனைவோம்.

எதிர்பார்ப்புகள் அழைப்புகளாக மாறும் போது, உங்களுக்கு நிறைய சம்மதங்கள் கிடைக்கும். அதன் விளைவாக சந்தோஷங்கள் பெருகும். ‘லவ்  பண்றப்ப, எப்படியெல்லாம் நடந்துக்கிட்டே... கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிப் போச்சு...’ என்கிற புலம்பல்கள் இருக்காது. காதலிக்கிற போது  நீங்கள் இருவரும் அனுபவித்த அதே நெருக்கமும் சுவாரஸ்யமும் காலத்துக்கும் தொடரும்... முயற்சி செய்து பாருங்களேன்!

எதிர்பார்ப்பில்லாமல் வாழ ஒரு பயிற்சி!


வீடு முழுக்க ஒரே குப்பை... தேவையற்ற பொருள்களால் நிரம்பி வழிகிற வீட்டை சுத்தப்படுத்த முடிவெடுக்கிறீர்கள். சுத்தப்படுத்த ஆரம்பித்ததும், ‘இது  வேண்டாம்... அது பயன்படாது...’ என ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி வீட்டுக்கு வெளியே வைக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் வீடே காலியாகிறது.  இரண்டே நாள்கள்தான்... மறுபடி மனம் என்கிற வேதாளம், மரத்தின் மீது ஏறிக் கொள்கிறது. ‘ச்சே... அந்த நாற்காலியில உட்கார்ந்து டி.வி  பார்த்தாதான் பார்த்த மாதிரி இருக்கு.

ஒரு கால் லேசா உடைஞ்சிருந்தா என்ன, சரி பண்ணிக்கலாம்’ என உடைந்து, ஓரத்தில் ஒதுக்கிய நாற்காலியை மறுபடி வீட்டுக்குள் கொண்டு  வருகிறீர்கள். ஒன்று இல்லாமல் வாழ முடியாது என்கிற உங்கள் நினைப் பில் ஒவ்வொன்றாக உள்ளே வருகிறது. மறுபடி உங்கள் வீடு, அதே பழைய  தோற்றத்துக்கு மாறுகிறது. புதிய சிந்தனைகளும்கூட இப்படித்தான். புதிய சிந்தனைகளுக்கு அத்தனை சீக்கிரத்தில் இடம் கொடுக்காது உங்கள் மனது. இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.

சுயநம்பிக்கை, சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாசிக்கிறோம் அல்லது அது தொடர்பான சொற்பொழிவைக் கேட்கிறோம். படிக்கவும் கேட்கவும்  பிரமாதமாகத்தான் இருக்கிறது. ‘இன்று முதல் நான் இவங்க சொல்றபடி தான் வாழப் போறேன்’ என வைராக்கியம் கொள்கிறோம். நம்மையும்  அறியாமல் நமக்குள் யானை பலம் வந்துவிட்டதாக உணர்கிறோம். எல்லாம் ஒருநாளோ... இரண்டு நாளோதான்... மறுபடி பழைய பலவீனங்களுடனும்  குழப்பங்களுடனும் மனது தடுமாறுகிறது.

யாராவது விசாரித்தால், ‘அவங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் பயன்படலை’ என சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஏன்?பிறந்தது முதல்  லட்சக்கணக்கான நெகட்டிவ் எண்ணங்களால் வளர்க்கப்படுகிறோம் நாம் ஒவ்வொருவரும். ‘இது முடியாது, அது தவறு, சாத்தியமே இல்லை’ என்கிற  மாதிரியான நெகட்டிவ் சிந்தனைகள். ஏற்கனவே பல வருடங்களாக மனதுக்குள் டியூன் செய்யப்பட்ட அந்த நெகட்டிவ் எண்ண அலைவரிசையின்  ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு, புதிய சிந்தனைகளுக்குப் பழகுவது என்பது சற்றே சிக்கலானதுதான்.

என்னதான் செய்வது? மாற்றம் தேவைப்படுகிற சிந்தனைகளை தினசரி மந்திரம் போல உச்சரிக்க வேண்டும். ‘நான் அன்பானவன்/ள்...  நான் என்  துணையை அளவுகடந்து நேசிக்கிறேன்... காலத்துக்கும் காதலுடன் வாழ விரும்புகிறேன்...’ என நீங்கள் விரும்பும் மாற்றத்தை வாய்விட்டுப் பல  முறை சொல்லிக்கொண்டே இருங்கள். குளிக்கிற போது, தனிமையில் இருக்கும்போது... இப்படி எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை  வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த ‘பழையன கழிதல்’ டெக்னிக், நிச்சயம் உங்கள் சிந்தனைகளை மட்டுமின்றி, உங்களுக்கும்  துணைக்குமான அன்யோன்யத்தை, அணுகுமுறையை பாசிட்டிவாக மாற்றும்.

நெல்லோ, புல்லோ... பயிர் நன்றாக வளர ஆரோக்கியமான இடைவெளி அவசியம். பயிர் சுதந்திரமாக, ஆரோக்கியமாக வளர்ந்து செழிக்க வேண்டும்  என்பதற்காகத்தான் நாற்றுகளைப் பிடுங்கி, போதுமான இடைவெளி விட்டு நடுகிறார்கள். பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற இந்த இடைவெளி,  உறவுகளின் வளர்ச்சிக்கும் முக்கியம். குறிப்பாக தம்பதியருக்கிடையில்... நமது சமூக அமைப்பிலோ பெரும்பாலான கணவன்-மனைவிக்கிடையே அது  சாத்தியப்படுவதே இல்லை.

மனைவி படித்தவராக இருப்பார். திறமைசாலியாக இருப்பார். நல்ல வேலையில், கை நிறைய சம்பளத்தில், சமூகத்தில் கவனிக்கத்தக்க இடத்தில்  இருப்பார். ‘அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது. என்னையும் குடும்பத்தையும்  கவனிச்சுக்கிட்டா போதும்’ என முடக்கிப் போடும் கணவர்கள் எத்தனை எத்தனை பேர்?

திருமணத்துக்கு முன்பான மனைவியின் திறமைகள் எதுவும், திருமணத்துக்குப் பிறகு தொடர்வதில் பல ஆண்களுக்கும் ஏனோ  உடன்பாடிருப்பதில்லை. தப்பித் தவறி மனைவியை வேலைக்கு அனுப்புகிறவர்களும், குழந்தை பிறந்ததும் மாறிப் போகிறார்கள். ‘நீ வேலைக்குப்  போனா, குழந்தையை யார் பார்த்துப்பா?’ எனக் கேட்கிற கணவர்கள் யாரும், குழந்தை வளர்ப்பில் தனக்கும் பங்குண்டு என்பதை ஏனோ  உணர்வதில்லை.

‘கல்யாணத்துக்குப் பிறகு உங்கம்மா, அக்கா, தங்கச்சிங்கன்னு உறவு கொண்டாடற வேலையெல்லாம் வேண்டாம்’ எனக் கணவரை அடக்கி ஆளும்  மனைவிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. இந்த அணுகுமுறை ஆரோக்கியமான தாம்பத்யத்தின் அழகையும் அன்யோன்யத்தையும் சிறிது சிறிதாகக்  கெடுக்கும்... மன விரிசல் பெரிதாகி, ஒரு கட்டத்தில் பிரிவு மட்டுமே தீர்வாகி நிற்கும். கணவன்-மனைவி என்கிற உறவுக்கிடையில் பரஸ்பர  இடைவெளியை அனுமதிப்பதுதான் இதற்கு ஒரே வழி!

இடைவெளி அனுமதிக்கப்படுகிற உறவுகளில் இடையூறுகள் வருவதில்லை. அன்பும் அன்யோன்யமும் வளர, அது விரிவடைய, ஆரோக்கியமாக  நிலைத்திருக்க அந்த இடைவெளி மிக மிக அவசியம்.  நம் எல்லோருக்கும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஏதோ சில அந்தரங்கங்கள்,  ரகசியங்கள் இருக்கும். கணவரிடமோ, மனைவியிடமோ பகிர்ந்துகொள்ள விரும்பாத அந்த விஷயங்களை நமக்கு மிகப் பிடித்த ஒரு தோழி அல்லது  நண்பரிடம் பகிர்ந்து கொள்வோம். அதன் பின்னணி என்ன? அப்படி நாம் பகிர்ந்து கொள்கிற அந்த நபர், அந்த விஷயங்களை வேறு யாரிடமும் சொல்ல  மாட்டார் என்கிற பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும்தானே காரணங்கள்? அந்த நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் வாழ்க்கைத் துணையிடமும்  இருக்க வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்களிடம் அதீத அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு நாம் எல்லோரும் செய்கிற தவறு, அவர்களை அதிகமாகக்  கட்டுப்படுத்துவது. வாழ்க்கைத் துணையிடம் மட்டுமல்ல... நமது குழந்தைகள், நம்மிடம் வேலை பார்ப்பவர்கள் என எல்லோரையும் இப்படித்தான்  நடத்துகிறோம். மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், கணவனுக்கான இலக்கணங்கள் இவைதான் என்றும் நம் சமுதாயம் சில  எழுதப்படாத விதிகளை உருவாக்கியிருக்கிறது.

அதுதான் பாதுகாப்பு என்று தவறாக நினைத்துக் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவனுக்கோ, மனைவிக்கோ  தன் மனதிலிருப்பதை துணையிடம் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. சொன்னால் என்னாகுமோ... துணைவர் அதை எப்படி எடுத்துக்  கொள்வாரோ... நாளைக்கே அதைக் குத்திக் காட்டிக் காயப்படுத்தினால் என்ன செய்வது போன்ற தயக்கங்கள் அதிகரிக்கின்றன. கணவன்-  மனைவிக்கிடையிலான அந்த வெளி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அந்த இடைவெளி முழுக்க தேவையற்ற  குப்பைகளால் நிரப்புகிறோம். குப்பைகள் என இங்கே குறிப்பிடுவது, தேவையற்ற எண்ணங்களை...

அதாவது, நாம் நம்மை நமது எண்ணங்களை வைத்தே எடை போடுகிறோம். மற்றவர்களை மட்டும் அவர்களது நடத்தையை வைத்து எடை  போடுகிறோம். அதனால்தான் உலகிலேயே நம்மைத் தவிர மற்ற எல்லோரும் கெட்டவர்கள் என நினைக்கிறோம். கணவரைப் பற்றி அல்லது  மனைவியைப் பற்றி, மற்ற உறவுகளைப் பற்றிய கெட்ட எண்ணங்களைக் குப்பையாகச் சேகரிக்கிறோம். எல்லோரையும் எண்ணங்களை வைத்து எடை  போடக் கற்றுக் கொண்டால், இந்தக் குப்பைகள் சேராது. கணவன் - மனைவிக்கிடையே இது மிக முக்கியம். மனைவியைப் பற்றி கணவனும்,  கணவனைப் பற்றி மனைவியும் தவறான எண்ணங்களைத் தேக்கிக் கொண்டே போனால், இருவருக்குமிடையில் குப்பைகள் தேங்கி, இடைவெளி  என்பதே இல்லாமல் போய் விடும்.

நமது எண்ணங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • நம்மைப் பற்றி நமக்கு மட்டுமே தெரிந்தது. மற்றவருக்குத் தெரியாதது.
  • நம்மைப் பற்றி நமக்கும் தெரிந்தது. மற்றவர்க்கும் தெரிந்தது.
  • நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது. ஆனால், மற்றவர்க்குத் தெரிந்தது.
  • நம்மைப் பற்றி நமக்கும் தெரியாதது. மற்றவர்க்கும் தெரியாதது.

இவற்றில் 2வது, 3வது பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். 4வது ஆழ்மன சிந்தனை தொடர்பானது. அதுவும் தேவையில்லை. முதல்  விஷயம்தான் முக்கியம். மற்றவர்க்குத் தெரியாத நமது உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள நமக்கு நம்பகமான ஒரு துணை அவசியம். நடிகைகள்,  நடிகர்கள், பிற துறை பிரபலங்கள் என சிலர், வெளி உலகுக்குத் தெரியாத சில விஷயங்களை, தமக்கு நெருக்கமான சிலரிடம் மட்டுமே பகிர்ந்து  கொள்வார்கள்.

அப்படி அவர்கள் பகிர்ந்து கொள்கிற தகவல்கள் வெளியே போகாது என்கிற நம்பிக்கையில்... இருட்டான அந்தப் பகுதி, சம்பந்தப்பட்ட அந்த  இருவருக்கும் இடையே பாதுகாப்பாக இருக்கும்போது, அவர்களிடையே நெருக்கமும் அன்பும் கூடும். அதே விதிதான் தம்பதிக்கிடையிலும்  அவசியமாகிறது. இருவருக்கும் இடையில் அவ்வப்போது வருகிற பிரச்னைகளை உடனுக்குடன் பேசித் தீர்த்து சரி செய்து கொள்வதன் மூலம்  இடைவெளியில் குப்பைகள் சேராமல் தவிர்க்கலாம்.

உங்கள் துணை எப்போதும் சரியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். அப்படி நினைக்கத் தொடங்கினாலே, ஒவ்வொரு நிமிடமும்,  துணையின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, விமர்சனம் செய்யவும், குறை சொல்லவும், ஜட்ஜ்மென்ட் வழங்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.  எப்படியும் நம் துணையை மாற்றி விடலாம் என்கிற நம்பிக்கையையும் ஓரங்கட்டுங்கள். அப்படி நினைப்பதும் உங்கள் உறவைப் பாதிக்கும்.
குறையில்லாத மனிதர் என யாருமே இல்லை. நாம் நேசிப்பவரை அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகுவதுதான் உறவுக்கு அழகு. உங்கள்  இருவருக்குள்ளும் என்ன நடந்தாலும், அதை மறைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். நடந்தது நல்லதாக இருப்பின் மகிழ்ச்சி.

காது கொடுங்கள்!

உங்கள் துணை உங்களிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வரும்போது, நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், (உதாரணத்துக்கு பேப்பர்  படிப்பது, டி.வி பார்ப்பது, சமைப்பது...) உடனே அதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

‘இதெல்லாம் ஒரு விஷயமா... இதைப் போய் ஏன் பெரிசுபடுத்தணும்’ என்று உங்கள் துணையின் பிரச்னையின் தீவிரத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.

‘அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்... எல்லாத்துக்கும் நீதான் காரணம்... நான் சொன்னபடி கேட்டிருக்கணும்’ என துணையின் தலையில் குட்டி, தீர்வு  சொல்லாதீர்கள்.

துணையின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். ‘எங்கம்மா சொன்னதால உனக்கு வருத்தமாயிடுச்சா... எங்கப்பா திட்டினதால மனசு  கஷ்டப்பட்டியா...’ என அக்கறையாக விசாரியுங்கள்.

பிரச்னையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிற உங்கள் துணையிடம், அது தொடர்பான நேர்மையான கேள்விகளை, அக்கறையாகக் கேளுங்கள். அதைத்  தவிர்த்து, கிண்டலாக, கேலியாக விசாரிக்காதீர்கள்.

உங்கள் துணையின் பிரச்னை, உங்களுக்கு நடந்திருந்தால் எப்படி உணர்வீர்களோ அதே மனநிலையுடன் அன்பாக அணுகுங்கள்.


‘இப்ப என்னாயிடுச்சு... நான் இருக்கேன்ல... எதுவானாலும் பார்த்துக்கலாம்’ என முழு மனதுடன் ஆதரவு கொடுங்கள். ஏதேனும் பிரச்னை என்றால், உடனே துணையைக் குட்ட ஆரம்பிக்காதீர்கள். மனதுக்கு ஒவ்வாத ஒரு நிகழ்வை, மனதுக்கு உகந்த, பாசிட்டிவான,  மகிழ்ச்சியான தருணமாக, அனுபவமாக எப்படி மாற்றுவது என்பதை இருவரும் ஒரு விளையாட்டாகவே கடைப்பிடிக்கலாம். உதாரணத்துக்கு இருவரும்  படம் பார்க்க முடிவெடுத்து தியேட்டருக்கு போகிறீர்கள். டிக்கெட் காலி. அதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல், அந்த நேரத்தை  நீங்கள் நீண்ட காலமாகத் திட்டமிட்ட ஒரு இடத்துக்குப் போகச் செலவிடலாம்.

அது உங்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு ரெஸ்டாரென்ட்டாக இருக்கலாம். காதலித்த காலத்தில் அதிக நேரத்தைக் கழித்த அதே கடற்கரையாக  இருக்கலாம். ஒருவேளை  டிக்கெட் கிடைத்து படம் பார்த்திருந்தால்கூட உங்களுக்கு அப்படியொரு அனுபவம் கிடைக்காமல் போயிருக்கலாம். வாழ்க்கையில் நாள்தோறும் புதிது புதிதாகப் பிரச்னைகள் வந்து கொண்டுதானிருக்கும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் பக்கத்தில் இருப்பதைத்  தவிர்த்து, கசப்பான நேரங்களிலும் சேர்ந்தே இருப்பது, உங்கள் இருவருக்குமான இடைவெளியை அழகாக்கும். அர்த்தப்படுத்தும்.

கலீல் ஜிப்ரான்
கவிதை மாதிரி...நீங்கள் இணைந்திருங்கள்...
ஆனால், உங்களுக்குள் சிறிது இடைவெளி இருக்கட்டும்.
சொர்க்கத்தின் தென்றல் அதன் வழியே உங்களிடம் செல்லட்டும்.
ஒருவர் கோப்பையை ஒருவர் இட்டு நிரப்புங்கள்.
ஆனால், மற்றவர் கோப்பையிலிருந்து எடுத்துப் பருகாதீர்கள்...
பாடி, ஆடி மகிழ்ச்சியாக இருங்கள்...
ஆனால், தனித்தனியாக இருங்கள்...

(வாழ்வோம்!)
எழுத்து வடிவம்: மனஸ்வினி
நன்றி குங்குமம் தோழி

Tuesday 9 April 2013

நல் தெய்வம் பசு

ஆர்க்கும் நல் தெய்வம் பசு எனும்
ஆகம மறைகள்
ஏர்க்கும் நல்தெய்வம் இதனின் ஊங்கு
இல்லையாம்; எண்ணி
நீர்க்கும் புற்கும்  நல் நிழலுக்கும்
நேரம் முன் இயற்றிப்
பார்க்கும் தன்தொழில் பின்படில்
உழும் தொழில் பலிக்கும்.  (6)


ஆகமங்களும், வேதங்களும்  யாவர்க்கும் நல்ல தெய்வம் பசு என்றே கூறுகின்றன. ஏர்த்தொழிலுக்கும் இதனை விட நல்ல தெய்வம் வேறு இல்லை என்று எண்ணி உழவன் அவை அருந்தும் நீர், மேயும் புல், தங்கும் நிழல் ஆகிய வசதிக்குரிய நேரத்தையும் செயலையும் முன்னர் அமைத்து, தனது தொழில் நலன்களை பின்னால் வைத்துக் கொல்வானேயானால் அந்த உலவனுக்கு உழுதொழில் சித்திக்கும்.

பொற்க்குறை, பசுக்குறை புருவையின் குறை
நெற்குறை பால் தயிர் நெய் எருக்குறை
சொற்க்குறை யாவையும் தொடர்ந்து சூழும்கால்
 புற்குறை இலமையில் புகுந்த வன்முறை. (17)

பொன் மாடு ஆடு நெல் பால் தயிர் நெய் எரு  முதலான இவற்றின் குறைகளால் உழவனின் புகழுக்கும் குறைவு உண்டாம். இவை யாவும் எதனால் ஏற்பட்டவை என்று ஆராயுமிடத்து புல் பரப்பு நிலம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வலிய குறையாம்.

மட்டுக்கு ஆகலா வயிற்றினுக்கு உழைத்திடின் அவற்றின் 
பாட்டுக்கு ஆகவும் மிகும்பலன் அதில் பகிர்ந்த எடுத்து
ஆள் தொக்கால் விலை எத்துனை அத்துணை சரியாய்
ஊட்டற்கு ஆவன விலை கொண்டு ஊட்டு உணவு உளவேனும். (20) 

மாட்டின் வயிற்றினுக்கு உதவாத மிளகாய், புகையிலை முதலிய பணப் பயிர்களின் பொருட்டு அந்த மாடுகள் பாடுபடுவதால் அவைகளின் வேலைகளுக்காகப் பணப் பயிரில் அதிகமாக கிடைத்த பொருள்களைப் பங்கு செய்து எத்தனை  ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாடுகள் செய்திருக்கின்றன என்பதை எண்ணி வேறு உணவுப் பயிர்களின் வருமான மிகுதியில் பருத்தி விதை, பிண்ணாக்கு முதலியன விலைக்கு வாங்கி சத்துள்ள அவ்வுணவை அவைகளுக்கு ஊட்டுவாயாக.

பகைத்து எதிர்த்திடில் கருவியாய் உதவுதல் பாரான் 
மிகுந்த வன்  படை விரயம் என்றே செலவிட்டான் 

வகுத்த பூர்வ சாதனம் என் மனத்தினில் அடையான்
தொகுத்த தீன்விற்கச்  சேவிற்பான் இருவரும் சுமடர். (21)

பகைவர்கள் எதிர்த்து வந்த போது அவர்களை நாட்டுக்குள் விடாமல் பாதுகாக்கும் படைகளின் உதவியை எண்ணாமல், மிகுதியான படையால் பொருள் விரயம் ஏற்படும் என்று தனது அரச பரம்பரைச்  சாதனத்தையும் கருதாமல் படைகளை குறித்த அரசனும், பொருள் வரவை நினைந்து, தீனிப்போர்களையும் பசு மாடுகளையும் விற்ற உழவனும் மடையர்கள் ஆவார்கள்.

துவரை கொள் கடலைகள் சொன்னல் மாடங்கள் 
அவரைகள் ஆதியில் அகலும் போக்கு எலாம்
எவையும் ஒன்றாக்குவி ஏற்ற காலத்தில் 
அவை மாறி ஆதிகட்கு அறிய தீனும் ஆம். (23)

துவரை கொள் கடலை சோளம் பயறு வகைகள் முதலியவற்றில் இருந்து கழியும் சக்கைகள், பொட்டுக் கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்துவை. அவை வெருமைக்காலத்தில் ஆடு மாடுகளுக்கு அரிதான தீனி ஆகும்.

சொன்னல் -  சோளம், மாடங்கள் - உளுந்து முதலிய பயறு வகைகள். அகலும் போக்கு - கழியும் பொட்டுக்கள். மறி - ஆடு . தீனும் - தீவனமும்

வாய் இலை என்னினும் வருத்தம் இல்லையோ
ஆய்தரத் தக்கதோ அமைப்பு இது என்பிரேல்
சேய்  சொல்லத் தெரிந்ததோ தேகம் போற்றுதல்
தாய் செயல் அல்லவோ தாங்கு சாலத்தை. (31)

ஆவினங்கள் வாய் பேசுவதற்கு இல்லை என்றாலும் அதற்கு வருத்தம் இல்லாமலா இருக்கும்? இது ஆராய வேண்டிய ஒன்றா? அவைகளின் அமைப்பு அது என்பாயானால், ஒரு குழந்தை சொல்லிய பின்பா அதன் உடம்பை பாதுகாக்கிறோம்? அக் குழந்தையை பாதுகாத்தல் தாயின் கடமை அல்லவா? அது போலப் பசுக்கூட்டதை நீ தாயாக இருந்து பாதுகாப்பாயாக.

கொள்ளிலோ வினை உயிர்ப்புகள் ஆதிபார் கொடையில் 
தள்ளி ஈயினும் பாதுகாப்பவர்க்கு நீ தருக
அள்ளி ஈயினும் கொலைஞருக்கு அளித்திடேல் அளிக்கில்
விள்ளும் அக்கொலைக்கு உடன்படும் பாவம் உன் மீதாம். (35)

ஆவினங்களில் ஒன்றை வாங்கும் போது அது வேலை செய்வதில் பெரு மூச்சு விடுகிறதா, அல்லது இயல்பான முறையில் மூச்சு விடுகிறதா என்பது போன்றவற்றை கவனித்து வாங்குக. அதனை விலைக்கு கொடுக்கும் போது, விலையைக் குறைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் அதனை பாதுகாப்பவனை பார்த்து கொடு. அதனை கொலை செய்து உண்பவன் அதிக விலை கொடுத்தாலும் அவனுக்கு கொடுக்காதே. கொடுத்தால் அக் கொலைக்கு உடன்படும் பாவம் உன்னை வந்து சாரும்.


மட்டுக்  கொட்டில் 

தள்ளு கோசலம் கோமயம் பின்வழி தரவே 
உள்ளுயர்ந்த நல் தளத்தினது உரைவழி சாடித்
தள்ளினும் எதிர் இறப்பினது ஈரம் ஆதிகள் ஆம் 
கொள்ளு குற்றம் கொண்டு ஓடுகால் வலியது கொட்டில். (39)

பசு கொட்டிலானது பசுக்களின் சாணம், மூத்திரம் முதலியன பின்னால் வழிந்தோடும் படியான உயர்ந்த தளத்தினை உடையதும் சாணம், மூத்திரம் முதலியன உறைந்து கிடந்த வழி, அவைகளை தள்ளிக் கழுவும் போது அக்கழிவுகளை அகற்றிக்கொண்டு ஓடும் கால்வாய்களை உடையதும் நிழல் தரும் தாழ்வாரம் உடையதுமாய் இருக்க வேண்டும்.

அளவு உறும் தோல் பிணைப்பு ஆகும் ஆம் சுழி 
உள சுழிக்கு அதிகம் தோற்கு  ஊனமும் தெரி
வன்முறும் மயிலை உத்தமம் கறுபபினது 
இளிவுறும் அதமம் ஆம் ஏனை மத்திமம். (58)


அளவுற்ற தோல் பிணைத்து நிற்கும் இடங்களில் சுழிகள் தோன்றும். இருக்கும்  அளவுக்கு மேல் சுழிகள் இருப்பின் அவை தோலுக்குப் பலக்குறைவே அல்லாது வேறு கெடுதி இல்லை என்று தெரிந்து கொள். காளைகளில் மயிலை நிறம் உத்தமம். கருப்பு நிறம் அதமம். மற்ற நிறங்கள் மத்திமம் என்றுணர்க.

வீழில் மெய்யுறல் சிதறுதல் விழுசலம் பி(ன்)னிடல்
பாலுறப் பருபருத்தலாய் இடை நடுப்பரிதல்
குழுரோகம் தன்னால் இவை முதலிய சூழால்
ஊழின் மாவலி உயிர் நிலை ஊட்டிய மருத்தின். (53)

விழுது போல் உடம்பு மெலிதல், மாட்டின் வாயில் ஊறி விழும் சலவாய் நார் போன்று பின்னித் தொங்குதல், ரோமம்  சிலிர்த்து காணுதல், இடுப்பும் வயிறும் நெளிந்து வருந்துதல் போன்ற நோய்களின் குறிகளை எண்ணாத வைத்தியன் ஊட்டிய மருந்தால் அவைகள் உயிர் நிலைக்கின்றதென்று கொள்ளுதற்கு இல்லை. ஊழின் வலியால் அவ்வுயிர் உடலில் நிலைத்து இருக்கிறது என்று கொள்ளலாம்.

பசு சம்பந்தமான பெயர்கள்

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான பெயர்கள் பசு சம்பந்தமானவை உதாரணம் கௌகாத்தி, கோரக்பூர், கோவா, கோத்ரா, கோதாவரி, கோவர்தன், கௌதம், கோமுக், கோகர்ம இன்னும் பல. இதிலிருந்தே தெரிகிறது நம் நாட்டில் பசுக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது.  

Tuesday 26 March 2013

முத்திரைகள்

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும்.  யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள்  மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் - நெருப்பையும், ஆள்காட்டி விரல் - காற்றையும், நடுவிரல் - வானத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சிறு விரல் - நீரையும்  குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக  நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற  விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி,  தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற  விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க  வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும்.  தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற  விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற  விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற  கழிவுகள் வெளியேறும்.

அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை  விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில்  உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை  சரியாகும்.

அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே  அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும்  செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது.  பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

Link Reference:

Chakras