எதையுமே 
எதிர்பார்க்காதவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களை சந்திப்பதில்லை 
என்பது சான்றோர் வாக்கு. இந்தத் தத்துவம், நம்  எல்லோருக்கும், எல்லாக் 
காலகட்டங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண 
உறவில் அடியெடுத்து வைப்போருக்கு!
திருமண பந்தத்தினுள் 
நுழையும்போது, நாம் ஒரு புதிய மனிதரைப் பார்க்கிறோம். அந்த நபர் நமக்குப் 
பொருத்தமானவர் என்றும், நமக்கு வேண்டிய  எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் 
என்றும் ஆழ்மனதில் நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு பதிந்து விடுகிறது. ‘எனக்கு 
எதிர்பார்ப்புகளே இல்லை’ என  வெளியே சொல்லிக் கொண்டாலும், எல்லா 
மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் அது இருக்கும். 
நம்மைச் 
சார்ந்தவர்கள் எல்லோரும், அது வாழ்க்கைத்துணையோ, குழந்தைகளோ, நண்பர்களோ 
யாராகினும், அவர்கள் நம்மைப் புரிந்து நடந்துகொள்ள  வேண்டும், எதைச் செய்ய 
வேண்டும், எதைச் செய்யக்கூடாது என சிலபல எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் 
கொள்கிறோம். ஏதேனும் பிரச்னை வந்தால்,  தவறு நம் மீதே இருந்தாலும், நம்மைச்
 சார்ந்தவர்கள் நமக்குத்தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என 
எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்றாட  வாழ்க்கையில் இப்படி ஏகப்பட்ட 
எதிர்பார்ப்புகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
எதிர்பார்ப்புகளே
 இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லைதான். ஆனால், அது அளவோடு இருந்தால் 
பரவாயில்லை. எல்லா விஷயங்களிலும்  எதிர்பார்ப்புகள் கூடும்போது, நம்மையும் 
அறியாமல் எதிராளியை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதை உணர்வதில்லை. 
எதிர்பார்ப்புகள் கூடக்கூட,  ஒவ்வொரு செயலிலும் அனுபவிக்க வேண்டிய வியப்பை 
நாம் தவற விடுகிறோம். எதிர்பார்க்காமல் நடக்கும் விஷயத்தில் கிடைக்கிற 
சந்தோஷமும்  சுவாரஸ்யமும் ஈடு இணையற்றது. நினைத்தது நினைத்த மாதிரியே 
நடந்தது என்கிற திருப்தியைத் தவிர, எதிர்பார்ப்பு வேறெதையும் நமக்குக்  
கொடுப்பதில்லை.
திருமண வாழ்க்கையில் இத்தகைய எதிர்பார்ப்புகள்தான் 
உறவுகள் சிதையவும், திருமணத்தைத் தோல்வியடையச் செய்யவும் காரணமாகின்றன.  
விவாகரத்து வேண்டி வழக்கறிஞர் களை அணுகும் பலரிடமும் பிரிவுக்கான 
காரணத்தைக் கேட்டுப் பாருங்கள்... ‘அவ (அல்லது) அவர் நான்  சொல்றபடி 
கேட்கறதே இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு 
கணவனோ, மனைவியோ தனக்குக் கட்டுப்பட்டு, தன்  விருப்பப்படி வாழ வேண்டும் என 
நினைப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான். அதன் பின்னணியில் மறைந்திருப்பது 
கட்டுப்பாடன்றி வேறில்லை. எதிர்பார்க்கிற உங்கள் குணத்தால், துணையின் 
திறமைகள் அனைத்துக்கும் கதவடைக்கப்படுகிறது. 
எதிர்பார்ப்புகள் 
குறைவதால், அங்கே அன்பும் காதலும் அதிகமாகிறது. உறவுகள் உயிர்ப்புடன் 
இருக்கின்றன.  உதாரணத்துக்கு உங்கள் குழந்தையையே  எடுத்துக் கொள்ளுங்கள். 
ஒரு விஷயத்தைச் செய்யாதே என நீங்கள் சொன்னால், அது வேண்டுமென்றே அதைத்தான் 
செய்யும். நாம் என்ன செய்ய  வேண்டும் என்பதை இன்னொருவர் நமக்கு சுட்டிக் 
காட்டுவது குழந்தை உள்பட யாருக்குமே பிடிப்பதில்லை. 
எதிர்பார்ப்பதும்
 அதை எதிர்ப்பதும்தான் மனித இயல்பு. உலகம் புரியாத குழந்தைகளுக்கே இப்படி 
என்றால், உங்களில் சரிபாதியான துணை மட்டும்  விதிவிலக்கா என்ன?
எதிர்பார்ப்புகளில்
 மறைந்திருக்கிற அடுத்த ஆபத்து, குறை கண்டுபிடிப்பதும், திட்டுவதும், 
விமர்சனம் செய்வதும். ‘இத்தனை வருஷமா என்கூட குப்பை  கொட்டறே... எனக்கு எது
 பிடிக்கும், எது பிடிக்காதுன்னு தெரியாதா?’ என்கிற திட்டில் 
நிறைந்திருப்பது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பு மட்டுமே. சரி... 
எதிர்பார்ப்பில்லாத உறவுக்கு எப்படிப் பழகுவது?
உங்கள்
 துணையின் செயல்கள் உங்களுக்குக் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ உண்டாக்கும் 
ஒவ்வொரு முறையும், உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்துவதையோ, திட்டுவதையோ, 
கடுமையாக விமர்சனம் செய்வதையோ தவிருங்கள். உங்களுடைய ரியாக்ஷன், 
எதிர்பார்ப்பின் விளைவாக  உண்டானதா என ஒரு நிமிடம் யோசியுங்கள். ‘காலையில 
எனக்கு வேணும்னு தெரியாது... சட்டையை ஏன் அயர்ன் பண்ணி வைக்கலே?’ என்று  
கத்துவது சுலபம். 
மனைவி என்பவள், கணவனின் தேவையறிந்து பணிவிடை கள் 
செய்யக் கடமைப்பட்டவள்தானே என்று காலங்காலமாக ஆண்கள் மனதில் பதிந்து  போன 
எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதானே இது? எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத 
போது, நம்மையும் அறியாமல் எதிராளியிடம் கடுமையாக நடந்து  கொள்கிறோம். 
எதிராளி அமைதியானவர் என்றால் அடங்கிப் போவார். அப்படியில்லாத பட்சத்தில், 
தன் பங்குக்கு திருப்பி வார்த்தைகளைக் கக்குவார்.  இருவருக்குமான 
வாக்குவாதம் முற்றும். அன்யோன்யம் கெடும்.
எதிர்பார்ப்புகளைக் 
கையாள் வது என்பது கணவன் - மனைவி இருவருக்குமே அவசியம் தெரிந்திருக்க 
வேண்டிய ஒரு கலை. அது வாழ்க்கையில்  மிகப்பெரிய சவாலும்கூட. வாழ்நாள் 
முழுவதும் அந்தச் சவாலை எதிர்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க 
வேண்டும். எதிர்பார்ப்புகளை  அழைப்புகளாக மாற்றுவது இந்தப் பிரச்னைக்கான 
அருமையான தீர்வு. எதிர்பார்க்கும் போது, எதிராளி அதைச் செய்தே ஆக வேண்டும் 
என்கிற  மறைமுகக் கட்டுப்பாட்டையும் வைக்கிறோம். ஆனால், அழைப்பில் 
அப்படியில்லை. 
செய்வதும் செய்யாமல் தவிர்ப்பதும் துணையின் 
தனிப்பட்ட விருப்பம். அழைப்பில் ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டிய அழுத்தமோ, 
மிரட்டலோ,  பயமுறுத்தலோ இருப்பதில்லை. ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதைச் 
செய்யலாமா?’ என்றோ, ‘நாம ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என்றோ, உங்கள்  
துணைக்கு அழைப்பு விடுக்கலாம். இந்த அணுகுமுறை நேர்மையானது. பாதுகாப்பானது.
 நம்மைப் போலவே நம் துணைக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.  துணையாகிய 
நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் அவருக்கும்
 இருக்கும் என யோசித்தாலே நம் தவறு நமக்குப்  புரிந்து விடும். முதல் 
கட்டமாக நம்மை மாற்றிக் கொள்ளவும் முனைவோம்.
எதிர்பார்ப்புகள் 
அழைப்புகளாக மாறும் போது, உங்களுக்கு நிறைய சம்மதங்கள் கிடைக்கும். அதன் 
விளைவாக சந்தோஷங்கள் பெருகும். ‘லவ்  பண்றப்ப, எப்படியெல்லாம் 
நடந்துக்கிட்டே... கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் மாறிப் போச்சு...’ 
என்கிற புலம்பல்கள் இருக்காது. காதலிக்கிற போது  நீங்கள் இருவரும் 
அனுபவித்த அதே நெருக்கமும் சுவாரஸ்யமும் காலத்துக்கும் தொடரும்... முயற்சி 
செய்து பாருங்களேன்!
எதிர்பார்ப்பில்லாமல் வாழ ஒரு பயிற்சி!
வீடு
 முழுக்க ஒரே குப்பை... தேவையற்ற பொருள்களால் நிரம்பி வழிகிற வீட்டை 
சுத்தப்படுத்த முடிவெடுக்கிறீர்கள். சுத்தப்படுத்த ஆரம்பித்ததும், ‘இது  
வேண்டாம்... அது பயன்படாது...’ என ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி வீட்டுக்கு 
வெளியே வைக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் வீடே காலியாகிறது.  இரண்டே 
நாள்கள்தான்... மறுபடி மனம் என்கிற வேதாளம், மரத்தின் மீது ஏறிக் 
கொள்கிறது. ‘ச்சே... அந்த நாற்காலியில உட்கார்ந்து டி.வி  பார்த்தாதான் 
பார்த்த மாதிரி இருக்கு. 
ஒரு கால் லேசா உடைஞ்சிருந்தா என்ன, சரி 
பண்ணிக்கலாம்’ என உடைந்து, ஓரத்தில் ஒதுக்கிய நாற்காலியை மறுபடி 
வீட்டுக்குள் கொண்டு  வருகிறீர்கள். ஒன்று இல்லாமல் வாழ முடியாது என்கிற 
உங்கள் நினைப் பில் ஒவ்வொன்றாக உள்ளே வருகிறது. மறுபடி உங்கள் வீடு, அதே 
பழைய  தோற்றத்துக்கு மாறுகிறது. புதிய சிந்தனைகளும்கூட இப்படித்தான். புதிய
 சிந்தனைகளுக்கு அத்தனை சீக்கிரத்தில் இடம் கொடுக்காது உங்கள் மனது. 
இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். 
சுயநம்பிக்கை, சுயமுன்னேற்றப் 
புத்தகங்களை வாசிக்கிறோம் அல்லது அது தொடர்பான சொற்பொழிவைக் கேட்கிறோம். 
படிக்கவும் கேட்கவும்  பிரமாதமாகத்தான் இருக்கிறது. ‘இன்று முதல் நான் 
இவங்க சொல்றபடி தான் வாழப் போறேன்’ என வைராக்கியம் கொள்கிறோம். நம்மையும்  
அறியாமல் நமக்குள் யானை பலம் வந்துவிட்டதாக உணர்கிறோம். எல்லாம் ஒருநாளோ...
 இரண்டு நாளோதான்... மறுபடி பழைய பலவீனங்களுடனும்  குழப்பங்களுடனும் மனது 
தடுமாறுகிறது. 
யாராவது விசாரித்தால், ‘அவங்க சொல்றது நல்லாத்தான் 
இருக்கு. எனக்குத்தான் பயன்படலை’ என சப்பைக்கட்டு கட்டுகிறோம். 
ஏன்?பிறந்தது முதல்  லட்சக்கணக்கான நெகட்டிவ் எண்ணங்களால் 
வளர்க்கப்படுகிறோம் நாம் ஒவ்வொருவரும். ‘இது முடியாது, அது தவறு, சாத்தியமே
 இல்லை’ என்கிற  மாதிரியான நெகட்டிவ் சிந்தனைகள். ஏற்கனவே பல வருடங்களாக 
மனதுக்குள் டியூன் செய்யப்பட்ட அந்த நெகட்டிவ் எண்ண அலைவரிசையின்  
ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு, புதிய சிந்தனைகளுக்குப் பழகுவது என்பது சற்றே
 சிக்கலானதுதான். 
என்னதான் செய்வது? மாற்றம் தேவைப்படுகிற 
சிந்தனைகளை தினசரி மந்திரம் போல உச்சரிக்க வேண்டும். ‘நான் 
அன்பானவன்/ள்...  நான் என்  துணையை அளவுகடந்து நேசிக்கிறேன்... 
காலத்துக்கும் காதலுடன் வாழ விரும்புகிறேன்...’ என நீங்கள் விரும்பும் 
மாற்றத்தை வாய்விட்டுப் பல  முறை சொல்லிக்கொண்டே இருங்கள். குளிக்கிற போது,
 தனிமையில் இருக்கும்போது... இப்படி எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை  
வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இந்த ‘பழையன கழிதல்’ டெக்னிக், 
நிச்சயம் உங்கள் சிந்தனைகளை மட்டுமின்றி, உங்களுக்கும்  துணைக்குமான 
அன்யோன்யத்தை, அணுகுமுறையை பாசிட்டிவாக மாற்றும்.
நெல்லோ, புல்லோ... பயிர் நன்றாக வளர ஆரோக்கியமான இடைவெளி அவசியம். பயிர் 
சுதந்திரமாக, ஆரோக்கியமாக வளர்ந்து செழிக்க வேண்டும்  என்பதற்காகத்தான் 
நாற்றுகளைப் பிடுங்கி, போதுமான இடைவெளி விட்டு நடுகிறார்கள். பயிர்களின் 
வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற இந்த இடைவெளி,  உறவுகளின் வளர்ச்சிக்கும் 
முக்கியம். குறிப்பாக தம்பதியருக்கிடையில்... நமது சமூக அமைப்பிலோ 
பெரும்பாலான கணவன்-மனைவிக்கிடையே அது  சாத்தியப்படுவதே இல்லை. 
மனைவி
 படித்தவராக இருப்பார். திறமைசாலியாக இருப்பார். நல்ல வேலையில், கை நிறைய 
சம்பளத்தில், சமூகத்தில் கவனிக்கத்தக்க இடத்தில்  இருப்பார். ‘அதெல்லாம் 
எனக்குத் தேவையில்லை. கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது. 
என்னையும் குடும்பத்தையும்  கவனிச்சுக்கிட்டா போதும்’ என முடக்கிப் போடும் 
கணவர்கள் எத்தனை எத்தனை பேர்? 
திருமணத்துக்கு முன்பான மனைவியின் 
திறமைகள் எதுவும், திருமணத்துக்குப் பிறகு தொடர்வதில் பல ஆண்களுக்கும் ஏனோ 
 உடன்பாடிருப்பதில்லை. தப்பித் தவறி மனைவியை வேலைக்கு அனுப்புகிறவர்களும், 
குழந்தை பிறந்ததும் மாறிப் போகிறார்கள். ‘நீ வேலைக்குப்  போனா, குழந்தையை 
யார் பார்த்துப்பா?’ எனக் கேட்கிற கணவர்கள் யாரும், குழந்தை வளர்ப்பில் 
தனக்கும் பங்குண்டு என்பதை ஏனோ  உணர்வதில்லை. 
‘கல்யாணத்துக்குப் 
பிறகு உங்கம்மா, அக்கா, தங்கச்சிங்கன்னு உறவு கொண்டாடற வேலையெல்லாம் 
வேண்டாம்’ எனக் கணவரை அடக்கி ஆளும்  மனைவிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. இந்த
 அணுகுமுறை ஆரோக்கியமான தாம்பத்யத்தின் அழகையும் அன்யோன்யத்தையும் சிறிது 
சிறிதாகக்  கெடுக்கும்... மன விரிசல் பெரிதாகி, ஒரு கட்டத்தில் பிரிவு 
மட்டுமே தீர்வாகி நிற்கும். கணவன்-மனைவி என்கிற உறவுக்கிடையில் பரஸ்பர  
இடைவெளியை அனுமதிப்பதுதான் இதற்கு ஒரே வழி!
இடைவெளி 
அனுமதிக்கப்படுகிற உறவுகளில் இடையூறுகள் வருவதில்லை. அன்பும் அன்யோன்யமும் 
வளர, அது விரிவடைய, ஆரோக்கியமாக  நிலைத்திருக்க அந்த இடைவெளி மிக மிக 
அவசியம்.  நம் எல்லோருக்கும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஏதோ சில
 அந்தரங்கங்கள்,  ரகசியங்கள் இருக்கும். கணவரிடமோ, மனைவியிடமோ 
பகிர்ந்துகொள்ள விரும்பாத அந்த விஷயங்களை நமக்கு மிகப் பிடித்த ஒரு தோழி 
அல்லது  நண்பரிடம் பகிர்ந்து கொள்வோம். அதன் பின்னணி என்ன? அப்படி நாம் 
பகிர்ந்து கொள்கிற அந்த நபர், அந்த விஷயங்களை வேறு யாரிடமும் சொல்ல  
மாட்டார் என்கிற பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும்தானே காரணங்கள்? அந்த 
நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் வாழ்க்கைத் துணையிடமும்  இருக்க 
வேண்டும்.
தன்னைச் சார்ந்தவர்களிடம் அதீத அன்பு காட்டுவதாக 
நினைத்துக்கொண்டு நாம் எல்லோரும் செய்கிற தவறு, அவர்களை அதிகமாகக்  
கட்டுப்படுத்துவது. வாழ்க்கைத் துணையிடம் மட்டுமல்ல... நமது குழந்தைகள், 
நம்மிடம் வேலை பார்ப்பவர்கள் என எல்லோரையும் இப்படித்தான்  நடத்துகிறோம். 
மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், கணவனுக்கான 
இலக்கணங்கள் இவைதான் என்றும் நம் சமுதாயம் சில  எழுதப்படாத விதிகளை 
உருவாக்கியிருக்கிறது. 
அதுதான் பாதுகாப்பு என்று தவறாக நினைத்துக் 
கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 
கணவனுக்கோ, மனைவிக்கோ  தன் மனதிலிருப்பதை துணையிடம் பகிர்ந்து கொள்வது 
சாத்தியமில்லாமல் போகிறது. சொன்னால் என்னாகுமோ... துணைவர் அதை எப்படி 
எடுத்துக்  கொள்வாரோ... நாளைக்கே அதைக் குத்திக் காட்டிக் காயப்படுத்தினால்
 என்ன செய்வது போன்ற தயக்கங்கள் அதிகரிக்கின்றன. கணவன்-  மனைவிக்கிடையிலான 
அந்த வெளி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அந்த 
இடைவெளி முழுக்க தேவையற்ற  குப்பைகளால் நிரப்புகிறோம். குப்பைகள் என இங்கே 
குறிப்பிடுவது, தேவையற்ற எண்ணங்களை...
அதாவது, நாம் நம்மை நமது 
எண்ணங்களை வைத்தே எடை போடுகிறோம். மற்றவர்களை மட்டும் அவர்களது நடத்தையை 
வைத்து எடை  போடுகிறோம். அதனால்தான் உலகிலேயே நம்மைத் தவிர மற்ற எல்லோரும் 
கெட்டவர்கள் என நினைக்கிறோம். கணவரைப் பற்றி அல்லது  மனைவியைப் பற்றி, மற்ற
 உறவுகளைப் பற்றிய கெட்ட எண்ணங்களைக் குப்பையாகச் சேகரிக்கிறோம். 
எல்லோரையும் எண்ணங்களை வைத்து எடை  போடக் கற்றுக் கொண்டால், இந்தக் 
குப்பைகள் சேராது. கணவன் - மனைவிக்கிடையே இது மிக முக்கியம். மனைவியைப் 
பற்றி கணவனும்,  கணவனைப் பற்றி மனைவியும் தவறான எண்ணங்களைத் தேக்கிக் 
கொண்டே போனால், இருவருக்குமிடையில் குப்பைகள் தேங்கி, இடைவெளி  என்பதே 
இல்லாமல் போய் விடும். 
நமது எண்ணங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
- நம்மைப் பற்றி நமக்கு மட்டுமே தெரிந்தது. மற்றவருக்குத் தெரியாதது.
- நம்மைப் பற்றி நமக்கும் தெரிந்தது. மற்றவர்க்கும் தெரிந்தது.
- நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது. ஆனால், மற்றவர்க்குத் தெரிந்தது.
- நம்மைப் பற்றி நமக்கும் தெரியாதது. மற்றவர்க்கும் தெரியாதது.
இவற்றில்
 2வது, 3வது பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். 4வது ஆழ்மன சிந்தனை 
தொடர்பானது. அதுவும் தேவையில்லை. முதல்  விஷயம்தான் முக்கியம். 
மற்றவர்க்குத் தெரியாத நமது உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள நமக்கு நம்பகமான 
ஒரு துணை அவசியம். நடிகைகள்,  நடிகர்கள், பிற துறை பிரபலங்கள் என சிலர், 
வெளி உலகுக்குத் தெரியாத சில விஷயங்களை, தமக்கு நெருக்கமான சிலரிடம் 
மட்டுமே பகிர்ந்து  கொள்வார்கள். 
அப்படி அவர்கள் பகிர்ந்து கொள்கிற
 தகவல்கள் வெளியே போகாது என்கிற நம்பிக்கையில்... இருட்டான அந்தப் பகுதி, 
சம்பந்தப்பட்ட அந்த  இருவருக்கும் இடையே பாதுகாப்பாக இருக்கும்போது, 
அவர்களிடையே நெருக்கமும் அன்பும் கூடும். அதே விதிதான் தம்பதிக்கிடையிலும் 
 அவசியமாகிறது. இருவருக்கும் இடையில் அவ்வப்போது வருகிற பிரச்னைகளை 
உடனுக்குடன் பேசித் தீர்த்து சரி செய்து கொள்வதன் மூலம்  இடைவெளியில் 
குப்பைகள் சேராமல் தவிர்க்கலாம். 
உங்கள் துணை எப்போதும் 
சரியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். அப்படி நினைக்கத் 
தொடங்கினாலே, ஒவ்வொரு நிமிடமும்,  துணையின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து 
கவனித்து, விமர்சனம் செய்யவும், குறை சொல்லவும், ஜட்ஜ்மென்ட் வழங்கவும் 
ஆரம்பித்து விடுவீர்கள்.  எப்படியும் நம் துணையை மாற்றி விடலாம் என்கிற 
நம்பிக்கையையும் ஓரங்கட்டுங்கள். அப்படி நினைப்பதும் உங்கள் உறவைப் 
பாதிக்கும்.
குறையில்லாத மனிதர் என யாருமே இல்லை. நாம் நேசிப்பவரை அவரது
 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகுவதுதான் உறவுக்கு அழகு. உங்கள்  
இருவருக்குள்ளும் என்ன நடந்தாலும், அதை மறைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். 
நடந்தது நல்லதாக இருப்பின் மகிழ்ச்சி. 
காது கொடுங்கள்! 
உங்கள்
 துணை உங்களிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வரும்போது, நீங்கள் 
எந்த வேலையில் இருந்தாலும், (உதாரணத்துக்கு பேப்பர்  படிப்பது, டி.வி 
பார்ப்பது, சமைப்பது...) உடனே அதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அவர் 
சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 
‘இதெல்லாம் ஒரு விஷயமா... இதைப் போய் ஏன் பெரிசுபடுத்தணும்’ என்று உங்கள் துணையின் பிரச்னையின் தீவிரத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
‘அதுக்குத்தான்
 அப்பவே சொன்னேன்... எல்லாத்துக்கும் நீதான் காரணம்... நான் சொன்னபடி 
கேட்டிருக்கணும்’ என துணையின் தலையில் குட்டி, தீர்வு  சொல்லாதீர்கள்.
துணையின்
 உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். ‘எங்கம்மா சொன்னதால உனக்கு 
வருத்தமாயிடுச்சா... எங்கப்பா திட்டினதால மனசு  கஷ்டப்பட்டியா...’ என 
அக்கறையாக விசாரியுங்கள்.
பிரச்னையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிற 
உங்கள் துணையிடம், அது தொடர்பான நேர்மையான கேள்விகளை, அக்கறையாகக் 
கேளுங்கள். அதைத்  தவிர்த்து, கிண்டலாக, கேலியாக விசாரிக்காதீர்கள்.
உங்கள் துணையின் பிரச்னை, உங்களுக்கு நடந்திருந்தால் எப்படி உணர்வீர்களோ அதே மனநிலையுடன் அன்பாக அணுகுங்கள். 
‘இப்ப
 என்னாயிடுச்சு... நான் இருக்கேன்ல... எதுவானாலும் பார்த்துக்கலாம்’ என 
முழு மனதுடன் ஆதரவு கொடுங்கள். ஏதேனும் பிரச்னை என்றால், உடனே துணையைக் 
குட்ட ஆரம்பிக்காதீர்கள். மனதுக்கு ஒவ்வாத ஒரு நிகழ்வை, மனதுக்கு உகந்த, 
பாசிட்டிவான,  மகிழ்ச்சியான தருணமாக, அனுபவமாக எப்படி மாற்றுவது என்பதை 
இருவரும் ஒரு விளையாட்டாகவே கடைப்பிடிக்கலாம். உதாரணத்துக்கு இருவரும்  
படம் பார்க்க முடிவெடுத்து தியேட்டருக்கு போகிறீர்கள். டிக்கெட் காலி. 
அதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல், அந்த நேரத்தை  நீங்கள் 
நீண்ட காலமாகத் திட்டமிட்ட ஒரு இடத்துக்குப் போகச் செலவிடலாம். 
அது
 உங்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு ரெஸ்டாரென்ட்டாக இருக்கலாம். காதலித்த
 காலத்தில் அதிக நேரத்தைக் கழித்த அதே கடற்கரையாக  இருக்கலாம். ஒருவேளை  
டிக்கெட் கிடைத்து படம் பார்த்திருந்தால்கூட உங்களுக்கு அப்படியொரு அனுபவம்
 கிடைக்காமல் போயிருக்கலாம். வாழ்க்கையில் நாள்தோறும் புதிது புதிதாகப் 
பிரச்னைகள் வந்து கொண்டுதானிருக்கும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் 
பக்கத்தில் இருப்பதைத்  தவிர்த்து, கசப்பான நேரங்களிலும் சேர்ந்தே 
இருப்பது, உங்கள் இருவருக்குமான இடைவெளியை அழகாக்கும். அர்த்தப்படுத்தும். 
கலீல் ஜிப்ரான் 
கவிதை மாதிரி...நீங்கள் இணைந்திருங்கள்...
ஆனால், உங்களுக்குள் சிறிது இடைவெளி இருக்கட்டும்.
சொர்க்கத்தின் தென்றல் அதன் வழியே உங்களிடம் செல்லட்டும்.
ஒருவர் கோப்பையை ஒருவர் இட்டு நிரப்புங்கள். 
ஆனால், மற்றவர் கோப்பையிலிருந்து எடுத்துப் பருகாதீர்கள்...
பாடி, ஆடி மகிழ்ச்சியாக இருங்கள்...
ஆனால், தனித்தனியாக இருங்கள்...
(வாழ்வோம்!)
எழுத்து வடிவம்: மனஸ்வினி
நன்றி குங்குமம் தோழி